Tuesday 22 May 2012

நூலக படிப்புகள்

கல்வியில் நாடு தன்னிறைவை அடைய கிராமங்கள் தோறும் நூலகம் திறப்பது அவசியம் என மத்திய அரசு வலியுறுத்துகிறது. பல்வேறு மாநிலங்கள் இத்திட்டத்தை தீவிரமாக அமல்படுத்தி வருகின்றன. நூலகர்களின் தேவையும் அதிகரித்துள்ளது. இளநிலை படிப்பை படித்து விட்டு வேறு ஏதாவது தொழில்கல்வி படிப்பை மேற்கொள்ள வேண்டும் என்று யோசிப்பவர்களுக்கு நூலகம் மற்றும் அறிவியல் படிப்பு சற்று மாறுபட்டதாகவே இருக்கும். எம்எல்ஐஎஸ்சி எனப்படும் நூலகவியல் படிப்பை முடித்தால் நூலகராக பணியாற்றலாம். ஏற்கனவே பல பல்கலைக்கழகங்கள் நேரடியாகவும், தொலைநெறியிலும் நூலகம் சார்ந்த இளநிலை, முதுகலை மற்றும் சான்றிதழ் படிப்புகளை அளித்து வருகின்றன. குறிப்பாக தொலைநெறியில் படிப்புகளை தேர்வு செய்பவர்கள் நூலக படிப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். இப்படிப்பை முடித்தவர்கள் வேலைவாய்ப்பை பற்றி கவலை கொள்ள தேவையில்லை. அரசு மற்றும் தனியார் பள்ளி கல்லூரிகள், அரசு நூலகங்களில் வேலைவாய்ப்புகளை பெறலாம்.

பிஎல்ஐஎஸ்சி படிப்பை மேற்கொள்ள பிகாம், பிஏ, பிஎஸ்சி, பிபிஏ உள்ளிட்டவற்றில் ஏதேனும் ஒரு இளநிலைப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பெரும்பாலும் மாணவர்கள் கலை அறிவியல் பட்டப்படிப்பை படித்து, ஏதேனும் ஒரு முதுநிலை அல்லது ஆசிரியர் படிப்பான பிஎட் முடித்து அதன் பிறகு போட்டித் தேர்வுகளில் கலந்துகொண்ட பிறகுதான் வேலைக்கு செல்ல முடியும். ஆனால் இந்த படிப்பை படித்து முடிக்கும் போதே அதற்கான வேலைவாய்ப்பும் காத்திருக்கிறது.  காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் பிஎல்ஐஎஸ்சி மற்றும் எம்எல்ஐஎஸ்சி போன்ற படிப்புகள் வழங்கப்படுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை எண்ணற்ற நூலகர் பணியிடங்கள் காலியாகவே உள்ளது. தனியார் நூலகத்தில் மட்டுமின்றி பள்ளி, கல்லூரிகள், அறிவியல் ஆய்வுக் கூடங்கள், சமூக அறிவியல் ஆய்வு மையங்கள், சட்டப்பேரவை, நாடாளுமன்றம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நூலகர் பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே இப்படிப்பை தேர்வு செய்வதன் மூலம் வேலைவாய்ப்புகளை எளிதில் பெறும் வாய்ப்பு உள்ளது

No comments:

Post a Comment